கரூர் ஜெய்ராம்ஸ் கல்லூரியில் திரைக்கதை முதல் திரையாக்கம் வரை தொடர்பான தேசிய அளவிலான பயிற்சிப்பட்டறை.
கரூர் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான திரைக்கதை முதல் திரையாக்கம் என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. திரைக்கதை எழுதுவது மற்றும் திரைக்கதையை எப்படி உயிரோட்டம் உடையதாக வடிவமைப்பது என்பது குறித்த பயிற்சியினை காட்சித் தொடர்பியல் துறை தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்தியது. மதுரை அமெரிக்கன் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் செளரினி பானர்ஜி வருகை தந்து உரையாற்றினார். தனது உரையில் காட்சிவழிக் கதை சொல்லல், நடிப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வாயிலாக கதையின் உண்மைத் தன்மை மேம்படுத்தப்பட்டு அதை காட்சிப்படுத்துவதே திரையாக்கத்தின் நோக்கமாகும்.
இதை விளக்கக் காட்சிகள், குறும்படங்கள், பயிற்சி உள்ளடக்கங்கள் மற்றும் படைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் . இன்றைய காலத்திற்குத் தேவையான திரைக்கதை அமைப்புகள் வசனங்களின் தேவை ஜனரஞ்சகமாக மக்களைச் சென்றடையும் வகையில் காட்சியமைப்பு ஆகியன குறித்து மாணவர்களிடையே பேசினார்.
கல்லூரி தாளாளர் பொறியாளர் ராமசாமி தலைமையேற்று சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமணசிங் பேசுகையில் நாவல் சிறுகதை ஆகியன படிப்பதற்கு ஏதுவாக மனக்கண் வழி பாத்திரங்களை அறியவைப்பர். ஆனால் திரைக்கதை கதாபாத்திரங்கள் உயிரோட்டம் உடையதாகக் காட்சிப்படுத்துவர். திரைக்கதை உருவாக்கம் சற்று மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டது என்றார். கல்லூரி நிர்வாக இயக்குநர் சிவகாமி வாழ்த்துரை வழங்கினார். காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் வசந்த பிரியன் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கார்த்தி ஆங்கிலத்துறைத்தலைவர் மகேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிகழ்வில் மூன்று துறைகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் பெருமளவில் பங்குகொண்டு பயன்பெற்றனர்.